சீருடை பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு
By: Nagaraj Tue, 15 Sept 2020 08:38:22 AM
131 பேருக்கு அண்ணா பதக்கம்... அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு முதல்வரின் 'அண்ணா' பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல் ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும்,ஆண்டுதோறும் செப்.15-ம் தேதிஅண்ணா பிறந்த தினத்தில் முதல்வர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு காவல் துறையில் 100 அதிகாரிகள், பணியாளர்கள், தீயணைப்புத் துறையில் 10 பேருக்கு முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது.
சிறைத் துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலைக் காவலர் வரை 10
அதிகாரிகள், பணியாளர்கள், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல்
படைவீரர் வரையிலான 5 அதிகாரிகள், பணியாளர்கள், விரல் ரேகைப்பிரிவில் 2
துணை கண்காணிப்பாளர்கள், தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநர், அறிவியல்
அலுவலர் என 2 பேருக்கு அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும்
வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பதக்கங்கள்
பெறுவோருக்கு அவர்கள் பதவிக்கேற்ப பதக்க விதிகள்படி வெண்கலப் பதக்கம்
மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகை வழங்கப்படும். மேலும், தமிழக முதல்வரின்
வீரதீர செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம், கடந்த ஆக. 15-ம் தேதி
திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர மாநகராட்சி உயர்நிலை
தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற எஸ்.கணேசனை
காப்பாற்றியதற்காக வழங்கப்படுகிறது.
அம்மாவட்டத்தில் பாளையங்கோட்டை
தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த நிலைய அதிகாரி எஸ்.வீரராஜ், முன்னணி
தீயணைப்பு வீரர் எஸ்.செல்வம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இருவருக்கும்
தலா ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும். இப்பதக்கங்களை பின்னர் நடைபெறும்
விழா ஒன்றில் முதல்வர் பழனிசாமி வழங்குவார். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.