- வீடு›
- செய்திகள்›
- காய்ச்சல் உயர்வு ... உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் அண்ணாமலை வலியுறுத்தல்
காய்ச்சல் உயர்வு ... உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் அண்ணாமலை வலியுறுத்தல்
By: vaithegi Mon, 19 Sept 2022 12:16:13 PM
சென்னை: தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- எச்1என்1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
எச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்.
மேலும் எச்1என் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பைத் தர வேண்டுமென்று பாஜக சார்பாக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.