நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்குவதாக அறிவிப்பு
By: Nagaraj Tue, 01 Sept 2020 08:36:07 AM
மழைக்கால கூட்டத் தொடர்... நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது என்று மக்களவைச் செயலாளர் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால், எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மக்களவை, மாநிலங்களவைச் செயலாளருடனும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனித்தனியே கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷான், ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, டிஆர்டிஓ, டெல்லி அரசு உயரதிகாரிகள் ஆகியோருடன் ஓம் பிர்லா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க வரும் எம்.பி.க்கள் அனைவரும் 72 மணிநேரத்துக்கு முன், கரோனா பரிசோதனை செய்திருத்தல் அவசியம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது குறித்து மக்களவை செயலாளர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மழைக்காலக்
கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவையை செப்டம்பர் 14-ம் தேதி காலை 9
மணிக்கு கூட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு
விடுத்துள்ளார். கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி, அக்டோபர்
1-ம் தேதிவரை நடக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முன்பரிந்துரைத்தபடி,
மழைக்காலக்கூட்டத் தொடரை செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம்
தேதிவரை இடைவெளியில்லாமல், அதாவது விடுமுறையின்றி நடத்த பரிந்துரைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.