தமிழக எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
By: Monisha Fri, 18 Dec 2020 2:07:35 PM
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், போக்கு வரத்து சுங்க சாவடிகள்,டாஸ்மாக் கடைகள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்கள் என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.7 கோடி பணம், 7 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த அதிரடி சோதனையில் லஞ்ச பணம் ரூ.2.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4.00 மணி முதல் மாவட்ட எஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கிருஷ்ணராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 40 ரூபாய் மேஜைக்கடியில் இருந்து கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த 12-ந் தேதி ஓசூர் பகுதியில் உள்ள மற்றொரு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடை பெற்றது. இன்று கர்நாடக பகுதியிலிருந்து வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழையும் பகுதியான ஜுஜுவாடி பகுதியில் அதிரடியாக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.