ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
By: Nagaraj Mon, 24 July 2023 8:40:05 PM
தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தஞ்சையில் நடந்த புத்தகத் திருவிழாவில் பாட்டு, கட்டுரை மற்றும் மாறுவேடப் போட்டியில் பரிசுகள் வென்றனர்.
தஞ்சை அருகே ஆச்சாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளி மாணவிகள் மூன்று பேர் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்படி இப்பள்ளி மாணவிகள் மகாலட்சுமி பாட்டு போட்டியில் முதலிடம், சாருமதி கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றனர். இதேபோல் மாறுவேட போட்டியில் மாணவி நீநிகா 2ம் இடம் பெற்றார்.
இதையடுத்து மாணவிகள் மூவருக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தக கூப்பன்களை பரிசாக வழங்கினார். விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், பொதுமக்களும் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர்.