பெங்களூரு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதா? - அதிகாரிகள் ஆலோசனை
By: Monisha Thu, 25 June 2020 11:56:36 AM
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், அரசு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏனென்றால் கர்நாடக அரசுக்கு வரும் வருவாயில் சுமார் 70 சதவீதம் பெங்களூருவில் இருந்து தான் வருகிறது. ஆனால் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.
இதில் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதா? அல்லது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை மட்டும் முடக்குவதா? என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
சில மந்திரிகள், பெங்களூருவில் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் சில மந்திரிகள், நகரில் ஊரடங்கை அமல்படுத்தினால், பொருளாதார ரீதியாக அரசுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த மாதிரியான ஊரடங்கை அமல்படுத்துவது என்பது குறித்து அரசு இன்று மந்திரிசபையில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.