லடாக் எல்லை நிலவரம் பற்றி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கிய ராணுவ தளபதி
By: Karunakaran Sat, 27 June 2020 11:10:16 AM
லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும்இதுகுறித்து அதிகாரபூர்வமாக சீன அரசு வெளியிடவில்லை.
இந்த மோதலுக்கு பின் எல்லை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதனால் எல்லை பகுதியில் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து படைகளை திரும்ப பெறுவதை விரைவுபடுத்த இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி நரவானே 2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்று எல்லை நிலவரத்தை ஆய்வு செய்தார். மேலும், மோதலில் காயம் அடைந்தராணுவ வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போது 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவில் கலந்து கொள்ள சென்ற ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவரை நேற்று ராணுவ தளபதி நரவானே நேரில் சந்தித்து பேசினார். எல்லையில் உள்ள சூழ்நிலை, இந்திய படைகளின் தயார் நிலை போன்றவை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அவர் விளக்கியதாக ராணுவ வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.