அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு
By: Nagaraj Wed, 02 Sept 2020 10:38:52 AM
கொரோனா சோதனை... நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்து எம்பிக்கள் உள்பட 4 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. 18 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தொடரில் மக்களவை காலையும், மாநிலங்களவை மாலையும் நடைபெற உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்காததால், நாடாளுமன்ற வளாகம் முழுவதையும் தூய்மைப்படுத்தப்படுகிறது. எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் மட்டுமின்றி, இரு அவைகளின் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள்
உள்பட சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஆயிரக்கணக்கான முக கவசங்களும், கையுறைகளும்,
நூற்றுக்கணக்கான கிருமிநாசினி பாட்டில்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து
எம்பிக்களுக்கும் முகக்கவசங்கள், கிருமிநாசினி பாட்டில்கள், கையுறைகள்
போன்றவை குறிப்பிட்ட அளவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கவும்,
எம்.பி.க்களின் காலணிகள், கார்கள் ஆகியவற்றுக்கு கிருமிநாசினி தெளிக்கவும்
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.