இ-பாஸ் இல்லாமல் வந்தால் கைது நடவடிக்கை - கோவை அதிகாரிகள் எச்சரிக்கை
By: Monisha Tue, 09 June 2020 09:54:10 AM
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் முறை செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து அந்த மண்டலங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும் மண்டலத்திற்கு வெளியில் இருந்து வரும் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால்கோவையில், வெளியூர்களில் இருந்து வருபவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. கார் மற்றும் ரெயில் மூலம் வருபவர்களின் வீடுகளுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் சென்று அவர்களின் சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்புகிறார்கள்.
இந்த நிலையில் கோவைக்கு பலர் இ-பாஸ் இல்லாமல் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து கூறியதாவது:-
கோவைக்கு விமானம், ரெயில் மற்றும் வாகனங்களில் சாலைகள் வழியாக வருபவர்களின் பட்டியல் சுகாதாரத்துறைக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் இ-பாஸ் இல்லாமல் சரக்கு வாகனங்களில் மறைந்து பலர் கோவைக்கு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக சென்னை மற்றும் டெல்லி, குஜராத், மராட்டியம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இல்லாமல் வருவதாக தெரியவந்துள்ளது. அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 269-ன் கீழ்(தொற்று நோயை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு உதவி செய்தல்) கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.