ராஜஸ்தான் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி
By: Karunakaran Fri, 14 Aug 2020 5:47:00 PM
ராஜஸ்தானில் முதல்-மந்தரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதால், சச்சின் பைலட்டின் துணை முதல்-மந்திரி பதவி கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி பறிக்கப்பட்டது. மேலும் அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் மந்திரி பதவியும் பறிக்கப்பட்டது.
அதன்பின், சச்சின் பைலட்டுக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏ.க்கள் வெளிமாநிலத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த சர்ச்சையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பேச்சுக்குப்பின், சச்சின் பைலட்டுடன் சமரசம் ஏற்பட்டது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நேற்று மாலை 5 மணிக்கு முதல் மந்திரி அசோக் கெலாட்டின் இல்லத்தில் அவரது தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றபோது, அதில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர். சச்சின் பைலட்டை அசோக் கெலாட் இன்முகத்துடன் வரவேற்றார். அதன்பின், எம்.எல்.ஏ.க்கள் பன்வார் லால் சர்மா மற்றும் விஷ்வேந்திர சிங் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி திரும்ப பெற்று கொண்டது.
இன்று ராஜஸ்தான் சட்டசபை கூடியபோது, கனமழை பெய்ததால் கூட்டம் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 125 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். பின்னர் குரல் வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. இதன் மூலம், கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்த குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளது.