அசாமில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Mon, 13 July 2020 11:08:00 AM
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக உத்தர பிரதேசம், பீகாரில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறது. இந்நிலையில் அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தற்போது, அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் உள்ள 23 மாவட்டங்களில் உள்ள 13 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.