அசாமில் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Wed, 15 July 2020 10:44:19 AM
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக உத்தர பிரதேசம், பீகாரில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 23 மாவட்டங்களில் உள்ள 33 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.