நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலி
By: Karunakaran Thu, 24 Sept 2020 4:41:27 PM
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இயற்கை பேரிடர்களால் அவதியடைந்து வருகின்றனர். கனமழை, வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற பல்வேறு பாதிப்புகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேபாள நாட்டில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேபாள நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருபுறம் கொரோனா பாதிப்புகளுக்காக மக்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், கனமழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரில் நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.
தற்போது நேபாளத்தின் சியாஞ்சியா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.