நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Sun, 16 Aug 2020 4:15:06 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் இயற்கை பேரிடர்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேபாள நாட்டில் நிலச்சரிவு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டின் பஹ்மதி மாகாணம் சிந்துபல்சவுக் மாவட்டத்தின் ஜுஹல் ரூரல் என்ற பகுதியில் உள்ள லிடி கிராமத்தின் மலைத்தொடர் பகுதியில் 170-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழை அன்று குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்த மலைத்தொடர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 37 வீடுகள் சேதமடைந்து மண்ணுக்குள் புதைந்தன. இதன் காரணமாக வீடுகளில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொடர்ந்து மீட்புக்குழுவினர் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் 21 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.