ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலிபான்கள் பலி
By: Karunakaran Sat, 12 Sept 2020 09:33:50 AM
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், அங்கு பயங்கரவாத தாக்குதல்கள்தொடர்ந்து நடந்து தான் வருகின்றன.
தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படைகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 22 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதுகுறித்த தகவலை அம்மாகாண காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிழக்கு கோஸ்ட் மாகாணம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை இரவு கலந்தர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடிகளை தலிபான்கள் தாக்கினார்கள். இதையடுத்து ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், சபரி மாவட்டத்தில் ஒரு தலிபான் மறைவிடத்தை குறிவைத்து போர் விமானம் தாக்கியதில் 12 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், தலிபான்கள் ஆக்கிரமிப்பு இடங்களைக் கைப்பற்றும் வரை ஆப்கான் படையின் ஒடுக்குமுறை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தலிபான் அமைப்பு தற்போது வரை எந்தவொரு கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.