லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி
By: Karunakaran Wed, 16 Sept 2020 09:41:11 AM
ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.
மிகச் சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களுடன் ரகசியமாக மேற்கொள்ளப்படும் இந்த சட்டவிரோத நீண்ட கடல் பயணங்கள் பல நேரங்களில் சோகத்தில் முடிவடைந்து விடுகின்றன. இதனால் இதுகுறித்து சர்வதேச இடம்பெயர் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து மக்களை எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் லிபியாவின் ஜ்வாரா கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு 3 சிறிய படகுகள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து லிபிய கடலோர காவல் படையினரருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு லிபிய கடலோர காவல் படையினர் விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், 24 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.