சீனாவில் உணவக விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 29 பேர் உயிரிழப்பு
By: Karunakaran Mon, 31 Aug 2020 4:24:53 PM
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்ஷி மாகாணம் ஜியான்பெங் நகரில் சென்ஹுவாங் என்ற கிராமம் உள்ளது. இங்கு 2 மாடிகள் கொண்ட பழமையான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள் இந்த ஓட்டலில் கொண்டாடப்பட்டது. இதனால், அந்த முதியவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் அங்கு வந்திருந்தனர்.
அந்த சமயத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணி அளவில்திடீரென ஓட்டல் இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். பின்னர் இதுகுறித்து மீட்புப்படையினர், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்பகுதி மக்களும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும் 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. தற்போது, கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 27 பேர் பிணமாக மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு பலத்த காயங்களும், 21 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.