இலங்கை கடற்படையினர் அட்டூழியம்; ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்
By: Nagaraj Sun, 18 Oct 2020 12:56:26 PM
மீண்டும் அட்டூழியம்... நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் பாட்டில் மற்றும் கற்களை கொண்டு தாக்கி, விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வானிலை மைய எச்சரிக்கையின் காரணமாக 14 நாட்களுக்கு பிறகு, நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றபோது 10-க்கும் மேற்பட்ட அதிவிரைவு கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை கச்சத்தீவை தாண்டவிடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு வீசி தாக்கி விரட்டியடித்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை ஆயுதங்களை கொண்டு வெட்டி விட்டனர்.
தங்களை சிறைபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக பல மீனவர்கள்,
தங்கள் படகுகளில் இருந்தும் மீன் பிடித்துக் கொண்டிருந்த வலைகளை
வெட்டிவிட்டு இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர். இலங்கை கடற்படை சென்றபின்
வெட்டிவிடப்பட்ட வலைகளை எடுத்துக்கொண்டு கரை சேர்ந்ததாக அவர்கள்
தெரிவித்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் தரப்பில் கூறுகையில், 14
நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் கொரோனா அச்சம்
காரணமாக இலங்கை கடற்படை, இந்திய மீனவர்களை விரட்டி அடித்ததால் படகு
ஒன்றிற்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக
தெரிவித்தனர்.
இந்நிலையில் தாங்கள் பாதுகாப்பாக மீன்பிடிப்பதற்கு
மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வை
எட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.