மியான்மர் பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னிலை
By: Karunakaran Mon, 09 Nov 2020 12:54:24 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையிலும் சில நாடுகளில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு மத்தியில் மியான்மரில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் மற்றும் 7 மண்டலங்கள் என மொத்தம் 1,171 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி உள்ளன. மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டன.
தற்போது தேர்தல் நாளன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியின் (வயது 75) ஜனநாயக தேசிய லீக் கட்சி (என்எல்டி) அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இதனால் அவர் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் ஆங் சான் சூகியின் கட்சியே அதிக இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. இருப்பினும், ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் அதனை நிராகரித்து தேர்தலை நடத்தி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.