கைது செய்யப்படலாம் என சீனாவில் இருந்து ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் தப்பியோட்டம்
By: Karunakaran Wed, 09 Sept 2020 12:11:52 PM
ஆஸ்திரேலியா-சீனா இடையே கொரோனா வைரஸ் முதல் பல விவகாரங்களில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆஸ்திரேலிய அரசு இணையதளங்களில் சைபர் தாக்குதல், வர்த்தகம் மோதல் போன்றவற்றால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அரசு ஊடகமான சிஜிடிஎன் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் ஷேங் லி என்ற பெண் செய்தித்தொகுப்பாளராக செயல்பட்டுவந்தார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்.
இவர் தொகுத்து வழங்கும் செய்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேறு ஒருவர் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், ஷேங் லி எங்கு சென்றார் என தகவல் வெளிவரவில்லை. அதன்பின், ஆஸ்திரேலிய பெண் செய்தித்தொகுபாளர் ஷேங் லி-யை சீன போலீசார் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி கைது செய்திருப்பது தெரியவந்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஷேங் லி எந்த விதத்தில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தார் என்ற தகவலை சீனா தெரிவிக்கவில்லை. ஷேங் லி-யை விடுதலை செய்யவேண்டும் என ஆஸ்திரேலியாவின் கோரிக்கையை சீனா நிராகரித்துவிட்டது. தற்போது, ஆஸ்திரேலியாவை தலைமையாக கொண்டு சீனாவில் செயல்பட்டு வரும் ஏபிசி மற்றும் ஏஎப்ஆர் ஆகிய செய்தி நிறுவனங்களின் கிளைகளில் முக்கியப்பொறுப்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
சிஜிடிஎன் செய்தி தொகுப்பாளர் ஷேங் லி போலீசாரால் கைது செய்யப்பட்டதையடுத்து இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்ததால், அச்சமடைந்த பில் பிரிட்லெஸ் மற்றும் மைக் ஸ்மீத் ஆகிய இருவரும் சீனாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்து அவர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர ஆஸ்திரேலியா தரப்பில் சீன அதிகாரிகளிடம் 5 நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன்பின் இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்களும் தங்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல சீனா அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2 பத்திரிக்கையாளர்களும் நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.