Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலையில் புயல் பாதிப்புகளை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் அதிகாரிகள்

திருவண்ணாமலையில் புயல் பாதிப்புகளை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் அதிகாரிகள்

By: Monisha Thu, 26 Nov 2020 3:35:18 PM

திருவண்ணாமலையில் புயல் பாதிப்புகளை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் அதிகாரிகள்

நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிகாலையிலிருந்து மழை விட்டுவிட்டு பெய்தது. இதையடுத்து காலை சுமார் 10 மணியிலிருந்து விடாமல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. அத்தியாவசிய பணிக்கு வெளியில் செல்பவர்கள் குடைபிடித்தபடியே செல்கின்றனர். இந்த தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

புயல் முன்னெச்சரிக்கையால் பாதிப்புகளை தடுக்கும் பணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு துறையில் பேரிடர் தடுப்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.

thiruvannamalai,storm,rain,damage,prevention ,திருவண்ணாமலை,புயல்,மழை,பாதிப்பு,தடுப்புப்பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நேற்றும் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் சென்னைக்கு செல்லும் பேருந்துகளும் அடியோடு நிறுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

செங்கம் பகுதியில் நிவர் புயலின் காரணமாக சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. நேற்று பகல் பொழுதில் செங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சாரல் மழை ஆங்காங்கே பெய்துகொண்டிருந்தது. மேலும் நிவர் புயல் காரணமாக இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. செங்கம் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Tags :
|
|
|