- வீடு›
- செய்திகள்›
- இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதை தவிருங்கள்; குடியரசு துணைத் தலைவர் பேச்சு
இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதை தவிருங்கள்; குடியரசு துணைத் தலைவர் பேச்சு
By: Nagaraj Fri, 07 Aug 2020 2:32:19 PM
கருத்து தெரிவிப்பதை தவிருங்கள்... பக்கத்து நாடுகள் உள்ளிட்ட, மற்ற நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கைய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370ஆவது பிரிவு நீக்கம் என்ற முடிவானது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பொதுவான நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் முதலாவது நினைவு தினத்தை ஒட்டி பஞ்சாப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த சுஷ்மா சுவராஜ் முதலாவது நினைவு சொற்பொழிவை நிகழ்த்தினார் குடியரசுத் துணைத்தலைவர். அப்போது, “ இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பின்பற்றி வரும் ஒரு நாடு; 370ஆவது பிரிவை அகற்றுவது என்ற முடிவு நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்குப் பின்னர் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி சில நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. மற்ற நாடுகளின்
விஷயங்களில் தலையிடுவதற்குப் பதிலாக தங்களது சொந்த நாட்டு விஷயங்களில் இதர
நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார் குடியரசுத் துணைத்
தலைவர்.
இறப்பதற்கு முன்பாக சுஷ்மா சுவராஜ் 370ஆவது பிரிவு குறித்து
வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத்தலைவர்,
“வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் இந்தியாவின் நிலைபாட்டை மிகவும்
திறமையோடு அவர் வெளிப்படுத்தி வந்ததோடு, அவற்றை மிகுந்த இனிமையோடும்,
மென்மையோடும் வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் நாடு மேற்கொண்டுள்ள
நிலைபாட்டை மிகவும் உறுதியாக வெளிப்படுத்துவதும் அவரது வழக்கமாக இருந்தது”
என்றும் குறிப்பிட்டார்.
காஷ்மீரில் 370ஆவது சட்டப் பிரிவு ரத்து
செய்யப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவை ஒட்டி ஆகஸ்டு 5ஆம் தேதி சீன வெளியுறவு
செய்தித் தொடர்பாளர் வாங், பீஜிங்கில் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில்
பேசும்போது, “காஷ்மீர் பிராந்தியத்தின் நிலைமையை சீனா நெருக்கமாகப்
கண்காணித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
தெளிவானது மற்றும் சீரானது.
இந்த பிரச்சினை பாகிஸ்தானுக்கும்
இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு சர்ச்சை.
இது ஐ.நா. சாசனம், ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானங்கள் மற்றும்
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள்
வகுத்துள்ளபடியே கையாளப்பட வேண்டும். 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது சட்ட
ரீதியாக மதிப்பற்றது ”என்று கூறியிருந்தார். இதற்கான பதிலாகவே குடியரசுத்
துணைத் தலைவர் வெங்கையா இந்தியாவின் பதிலைக் குறிப்பிட்டார்.