Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாலை விபத்துகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சாலை விபத்துகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

By: vaithegi Mon, 20 Feb 2023 5:51:11 PM

சாலை விபத்துகளுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கோரிக்கை


சென்னை: காலம் தாழ்த்தாமல் அரசு ஆணையிட வேண்டும் .... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, “தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 17,473 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2017-ம் ஆண்டில் தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் இறந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. சாலைவிபத்துகளுக்கு முதன்மைக் காரணம் மதுக்கடைகள் தான் என்பதை அரசு நன்றாக உணர்ந்திருந்தும் அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இதையடுத்து 2022-ஆம் ஆண்டு சாலைவிபத்துகளில் உயிரிழந்தவர்களில் 68 விழுக்காட்டினர், அதாவது, 12,032 பேர் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் நிகழ்ந்த விபத்துகளில் இறந்தவர்கள் ஆவர். சாலை விபத்துகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்துகளுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கூட, முதன்மையான காரணம் மதுக் கடைகள் தான் என்பது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் உண்மை ஆகும்.

மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் 20% முதல் 25% வரை குடித்து விட்டு ஊர்தி ஓட்டுவதால் ஏற்படுபவை ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மது போதையில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து காட்டப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு காப்பீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. எனவே இதையும் கருத்தில் கொண்டால் தமிழ்நாட்டில் நிகழும் சாலை விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை மது போதையால் நிகழ்ந்தவையாகும்.

anbumani,request ,அன்புமணி ,கோரிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் கூடுதலான சாலை விபத்துகள் நடக்கின்றன. அவற்றில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான சாலைவிபத்துகளுக்கு மதுக்கடைகள் தான் காரணம் எனும் போது, அவற்றை மூடுவது தான் மக்கள்நலன் காக்கும் செயலாக இருக்க முடியும். ஒருபுறம் மதுக்கடைகளை, அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மிக அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறந்து விட்டு, சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுவது ஒன்றுக்கொன்று முரணான செயல் ஆகும்.

சாலைவிபத்துகளை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால், ஒரே ஆணையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு ஆணையிடலாம். குறைந்தபட்சம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், மாவட்ட சாலைகளிலும் உள்ள மதுக்கடைகளை மட்டுமாவது மூடும்படி ஆணையிடுவது தான் சிறந்த செயலாகும். அதைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுக்கடைகள் எவ்வகையிலும் மக்கள் நலனுக்கானவை அல்ல. தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படாத மக்களே இல்லை எனும் அளவுக்கு அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட கொள்கை ஆகும். எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags :