கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களுக்கு தடை; முதலமைச்சர் அறிவிப்பு
By: Monisha Thu, 20 Aug 2020 3:09:00 PM
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்துள்ளார். அதனை தொடர்ந்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்தபோது கூறியதாவது:-
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு வேலூரில் 2,609 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.583.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் வேலூரில் 11,667 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7,524 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் 4,650 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதேபோல் இருசக்கர வாகன திட்டத்தில் வேலூரில் 3,882 பேர் பயனடைந்துள்ளனர். ராணிப்பேட்டையில் 3,878 பேர் பயனடைந்துள்ளனர். திருப்பத்தூரில் 3,540 பேர் பயனடைந்துள்ளனர்.
கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு-பாலாறு இணைப்புத்திட்டத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் பிற பகுதிகளை சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு விடுதி கட்ட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படுகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து கூறுகையில், கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.