பெங்களூருவில் ஒரேநாளில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் அபராதம்
By: Karunakaran Wed, 01 July 2020 09:59:53 AM
கர்நாடகாவில் ஆரம்பத்தில் குறைவாகவே கொரோனா பாதிப்பு இருந்தது. கொரோனா கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பெங்களூருவில் முகக்கவசம் அணிவது, தனிமனித விலகலை பின்பற்றுவது கட்டாயம் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி மார்ஷல்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கின்றனர்.
தற்போது நேற்று பெங்களூருவில் முகக்கவசம் அணியாத மற்றும் தனிமனித விலகலை பின்பற்றாத 3,232 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்து 406 அபராதத்தை மார்ஷல்கள் விதித்துள்ளனர். பல்வேறு பகுதிகளுக்கு சென்று, முகக்கவசம் அணியாதவர்களை பிடித்தத்தில் ஒரே நாளில் இவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றாததால் தான் என கவலை அடைந்துள்ளனர்.