- வீடு›
- செய்திகள்›
- வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளி... வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளி... வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
By: Nagaraj Sat, 16 May 2020 11:07:19 AM
வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு... தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது.
இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அப்பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை (17) வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்களா விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் 150 மில்லி மீற்றர் வரை கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.'
அத்துடன் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2 - 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதோடு, இதன் காரணமாக, அலைகள் கரையை நோக்கி அதிக தூரம் வர வாய்ப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.