கிராமவாசியாக இருந்தாலும் சரி... நகரவாசியாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் உள்ளனர்
By: Nagaraj Mon, 07 Nov 2022 5:25:39 PM
வல்சாத்: ஒவ்வொரு குஜராத்தியும், அது ஆதிவாசியாக இருந்தாலும், மீனவராக இருந்தாலும், கிராமவாசியாக இருந்தாலும், நகரவாசியாக இருந்தாலும் பாஜகவின் மீது முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்தார்.
அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி தமது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். வல்சாத் மாவட்டம் கப்ரடா தாலுகாவில் உள்ள நானா போந்தா கிராமத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
அப்போது நான் இதை குஜராத்திற்காக உருவாக்கினேன் என்ற பிரச்சார முழுக்கத்தை அறிமுகம் செய்தார். மேலும் அவர் கூறியதாவது: குஜராத்திற்கு செழிப்பை கொண்டு வந்தது தாமரை. அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குஜராத்தியும், அது ஆதிவாசியாக இருந்தாலும், மீனவராக இருந்தாலும், கிராமவாசியாக இருந்தாலும், நகரவாசியாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்.
20 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள பழங்குடியினர் பகுதியில் ஒரு
அறிவியல் பள்ளி கூட இல்லை, ஆனால் இன்று இப்பகுதியில் உள்ள அறிவியல்
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பழங்குடியின மாணவர்கள் படித்து
வருகின்றனர்.
மாநிலத்தில் 100 சதவீத வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர்
கிடைக்கிறது. வெறுப்பை பரப்பும் பிரிவினைவாத சக்திகள், குஜராத்தை அவமதிக்க
முயற்சித்தவர்கள், குஜராத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டனர். மக்கள்
கடுமையாக உழைத்து குஜராத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த காலத்தில் குஜராத்
மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்கள் மக்களால் விரட்டி
அடிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலிலும் அவர்கள் அதே
நிலையை சந்திப்பார்கள். டெல்லியில் நான் இருந்தாலும், குஜராத்தில் பாஜக
இந்த முறை சாதனை வெற்றியை பெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. கடந்த கால
சாதனைகளை முறியடிக்கவே இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக முடிந்தவரை அதிக
நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக இருக்கிறேன் என்று குஜராத் பாஜகவிடம்
கூறியுள்ளேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.