பாரதீய ஜனதா பேரிடர் சுற்றுலாவில் மும்முரமாக இருக்கிறது - ஆதித்ய தாக்கரே
By: Karunakaran Mon, 13 July 2020 2:04:36 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தற்போது தானே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தானே மாவட்டத்தில் கல்யாண்-டோம்பிவிலி, நவிமும்பை, பிவண்டி மற்றும் மிராபயந்தர் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா நிலைமை குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சுற்றுப்பயணம் செய்து வருவதை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, நாங்கள் இந்த நேரத்தில் மக்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துகிறோம். ஆனால் எதிர்க்கட்சி இங்கு பேரிடர் சுற்றுலாவில் மும்முரமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்து விட்டால், எதிர்க்கட்சி மட்டும் மகிழ்ச்சி அடையும் என்று கூறினார்.
மேலும் அவர், தாராவியை போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் கூட கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றால், கல்யாண்-டோம்பிவிலி பகுதியில் அது சாத்தியம் தான். வைரசை துரத்துவோம் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் மற்றும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.