- வீடு›
- செய்திகள்›
- தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்குழுவினரை அனுப்பிய பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் நன்றி
தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்குழுவினரை அனுப்பிய பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் நன்றி
By: Karunakaran Tue, 11 Aug 2020 12:12:24 PM
தென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது கேரளாவில் பலத்த கனமழைபெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் தொடர் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. மேலும் அங்குள்ள குடியிருப்பு அருகே உள்ள கல்லார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, 300 அடி உயரம் கொண்ட பெட்டிமுடி மலையில் 150 அடி சரிந்து ராட்சத பாறைகள் உருண்டன,
இதனால் அதிகாலை நேரத்தில் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேரும் மணலுக்குள் புதைந்து விட்டனர். 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையைச் சேர்ந்த 120 பேர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 85 பேர், சுகாதாரத் துறையினர் 100 பேர், வனத்துறையினர் 50 பேர், 200 போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கேரளா மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் பேட்டி அளித்தபோது, இடுக்கி நிலச்சரிவில் 22 பேரை காணவில்லை. வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்குழுவினர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், கோழிக்கோடு விமான விபத்திலும் தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.