ராகுல் குறித்து விமர்சனம் செய்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
By: Nagaraj Mon, 20 Mar 2023 8:33:47 PM
புதுடெல்லி: மிகவும் வெட்ககேடான செயல்... இந்திய ஜனநாயகத்தில் தலையிட ராகுல் வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுமட்டுமின்றி, இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வெளிநாடுகளின் உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிட வெளி நாடுகளை அழைத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி மனதளவில் திவாலாகிவிட்டதை காட்டியுள்ளது.
ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அத்தகையவர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். ராகுல் காந்தியின் செயலை இந்திய மக்கள் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள், என் வார்த்தை உண்மை. ஜனநாயகத்தின் அனைத்து எல்லைகளையும் அவர் மீறியுள்ளார். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
தொழிலதிபர் அதானி விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே பிரிட்டனில் ராகுல் காந்தி கூறிய கருத்தை பாஜக தவறாக சித்தரிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.