பிரதமர் கூறிய யோசனையை ராகுல்காந்தி கிண்டல் செய்ததற்கு பாஜக பதிலடி
By: Karunakaran Sat, 10 Oct 2020 4:10:27 PM
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு காற்றாலை நிறுவன தலைமை செயல் அதிகாரியுடன் பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் வீடியோவை வெளியிட்டு, நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்பது உண்மையான ஆபத்து இல்லை. ஆனால், அவரை சுற்றி இருப்பவர்களுக்கு அதை எடுத்துச்சொல்லும் துணிவு இல்லை என்பதுதான் ஆபத்தானது என்று கிண்டலாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் வீடியோவில், காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி சுத்தமான குடிநீர், ஆக்சிஜன் ஆகியவற்றையும் உற்பத்தி செய்யுமாறு மோடி யோசனை தெரிவித்து இருந்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ராகுல்காந்திக்கு பா.ஜனதா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், ராகுல்காந்தி புரிதல் இல்லாதவர் என்பதை சொல்லும் துணிச்சல், அவரைச் சுற்றி இருக்கும் யாருக்கும் இல்லை. பிரதமரின் யோசனையை உலகின் முன்னணி காற்றாலை நிறுவன தலைமை செயல் அதிகாரியே ஆதரிக்கும்போது, ராகுல்காந்தி கேலி செய்கிறார் என்று கூறினார்.
மேலும், பா.ஜனதா சமூக வலைத்தள துறை தலைவர் அமித் மாளவியா, அறியாமைக்கு வைத்தியமே கிடையாது. அறியா குழந்தை ராகுல், தன்னைப்போல் உலகத்தில் உள்ள எல்லோருமே அறியாமையில் இருப்பவர்கள் என்று நினைக்கிறார் என கூறினார். பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மெல்லிய காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கப்படுவதாக வெளியான 2 பத்திரிகை செய்திகளை வெளியிட்டு அவற்றை படிக்குமாறு கூறி, இந்த சிக்கலான விஷயம், ராகுல்காந்திக்கு புரியாது என்று கூறியுள்ளார்.