நடிகை கங்கனாவின் கருத்துக்கு ஒருபோதும் பாஜக ஆதரவு அளிக்காது - தேவேந்திர பட்னாவிஸ்
By: Karunakaran Tue, 08 Sept 2020 2:00:35 PM
சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறினார். மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்ட நடிகை கங்கனா ரணாவத்தை ஆளும் சிவசேனா மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் நடிகைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. மேலும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி இருப்பதற்கு மகாராஷ்டிரா மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காங்கிரசை சேர்ந்த மந்திரி விஜய் வடேடிவார், கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு சார்பில் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பது அரசியல் நோக்கம் கொண்டது. கங்கனா பா.ஜனதாவின் பற்றாளராக இருக்கிறார் என்று கூறினார்.
கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு “ஒய்-பிளஸ்” பிரிவு பாதுகாப்பு வழங்கியிருப்பதற்கு மராட்டிய மந்திரிகள் பா.ஜனதாவை விமர்சித்தனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நடிகை கங்கனா ரணாவத் மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு கூறிய கருத்தை பாரதீய ஜனதா ஒருபோதும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஒவ்வொரு தனிநபரின் உயிரை காப்பதும் அரசின் முக்கிய கடமையாகும். அதற்காக நாங்கள் அவரின் கருத்துக்களை ஆதரிக்கவில்லை. யாரும் ஆதரிக்கவும் போவதில்லை. நாங்கள் எங்களின் கடமையை செய்கிறோம். பயங்கரவாதிகள் கூட தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களுக்கு சட்டத்தின் பார்வையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதிலும் கங்கனா ரணாவத் ஒரு கலைஞராக இருக்கிறார் என்று கூறினார்.