அமெரிக்காவில் விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டு கொலை
By: Karunakaran Mon, 15 June 2020 12:30:42 PM
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன், ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. பின்னர், இந்த போராட்டம் இனவெறிக்கு எதிரான போராட்டமாக மாறியது.
போலீசாரின் அடக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிரான இந்த போராட்டம் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. பெருமளவிலான மக்கள் பேரணியாக திரண்டனர். இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் அங்கு சென்று அங்கிருந்த ரேஷார்ட் புரூக்ஸ் என்ற வாலிபரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
ரேஷார்ட் புரூக்ஸ் விசாரணைக்கு வர மறுத்துள்ளார். மேலும், போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை சுட்டு கொன்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த போராட்டம் நடைபெற்றபோது, போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்தனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், காவல்துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.