- வீடு›
- செய்திகள்›
- அமெரிக்காவில் போலீஸ் பிடியில் மேலும் ஒரு கருப்பர் பலியான சம்பவத்தால் கருப்பு இனத்தவர் அதிர்ச்சி
அமெரிக்காவில் போலீஸ் பிடியில் மேலும் ஒரு கருப்பர் பலியான சம்பவத்தால் கருப்பு இனத்தவர் அதிர்ச்சி
By: Karunakaran Fri, 04 Sept 2020 1:49:59 PM
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியான பின், அங்கு கருப்பர் இனத்தவர்களுக்கு எதிரான செயல்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர், மினியாபொலிஸ் நகரில் போலீஸ் பிடியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றோரு சம்பவம் நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகியுள்ளது. டேனியல் புருட் என்ற கருப்பு இனத்தவர், மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டபோது, அவரது சகோதரர் ஜோ, கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி நியூயார்க் நகரின் ரோசெஸ்டரில் போலீஸ் உதவியை நாடினார். அப்போது, தெருவில் ஆடையின்றி ஓடிய டேனியல் புருடை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கி உள்ளனர்.
டேனியல் புருடை போலீசார் தடுத்து நிறுத்தி தாக்கியதால் அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பான போலீஸ் வீடியோ வெளியாக தாமதம் ஆனதால், இப்போது டேனியல் புருடின் சகோதரர் ஜோ பொதுவெளிக்கு கொண்டு வந்துள்ளார். இது கருப்பு இனத்தவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவரது சகோதரர் ஜோ கூறுகையில், எனது சகோதரருக்கு உதவி பெறத்தான் நான் போலீசுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தேன். என் சகோதரர் கொலை செய்யப்படுவதற்காக அல்ல என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண அட்டார்னி ஜெனரல் கூறுகையில், இது ஒரு சோகமான நிகழ்வு. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.