மீண்டும் சுய தனிமைப்படுத்தி கொண்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
By: Karunakaran Mon, 16 Nov 2020 08:12:54 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு உலக தலைவர்கள், பிரபலகங்கள், வீரர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். அதன்படி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் கொண்டு செல்லப்பட்டார். இதில் குணமடைந்து போரிஸ் ஜான்சன் சிகிச்சை முடிந்து திரும்பினார். அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இருந்து பணியை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் எம்.பி.க்கள் குழுவுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், அவருடன் தொடர்பில் இருந்த எம்.பி. லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு முதல் போரிஸ் ஜான்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்ட நபருடனான தொடர்பை தொடர்ந்து ஜான்சன் சுய தனிமைப்படுத்துதலில் உள்ளார். முன்பே பாதிப்பு ஏற்பட்டு பின் அதில் இருந்து ஜான்சன் விடுபட்ட நிலையிலும், தனிமைப்படுத்துதல் விதிகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அங்கு 2-வது அலை மீண்டும் ஆரம்பிக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.