பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் - அதிபர் ஜெய்ர் போல்சனாரா
By: Monisha Sat, 06 June 2020 6:19:36 PM
பிரேசிலில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் கூறும்போது, ”தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடந்து உலக சுகாதார அமைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா விமர்சித்துள்ளார். இதுகுறித்து நேற்று பிரேசில் அதிபர் பேசும்போது, “ உலக சுகாதார அமைப்பு ஒரு தலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்” என்று தெரிவித்தார்.
பிரேசிலில் கொரோனா வைரஸால் இதுவரை 6,46,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,047 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.