பிரேசில் அதிபர் போல்சோனரோவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
By: Karunakaran Fri, 17 July 2020 09:10:14 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திய நிலையில், கொரோனா ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவுக்கு கடந்த 10 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின், வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
நான் நலமுடன் இருக்கிறேன். காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தனித்திருக்க முடியவில்லை என்று போல்சோனரோ கூறி மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
தற்போது, இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதனால், சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சோனரோ தெரிவித்துள்ளார். மேலும் அவர், தொடர்ந்து ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.