தெலுங்கானாவிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்
By: Nagaraj Sat, 07 Oct 2023 2:06:14 PM
ஐதராபாத்: தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் அந்தந்த மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
அமைச்சர் ஹரிஷ் ராவ், ரங்காரெட்டி மாவட்டத்தில் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் இத்திட்டம் குறித்து அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறியதாவது:-
இந்த சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மாணவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் உணர்கிறோம்.
இத்திட்டத்தின் பொறுப்புகள் நகர்ப்புறங்களில் உள்ள மாநகராட்சி மற்றும் மாநகராட்சி தலைவர்கள் மற்றும் மேயர்களிடமும், கிராமப்புறங்களில் கூடுதல் மாவட்ட ஆட்சியர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2,714 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும், 23 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர். ஒவ்வொரு நாளும் பள்ளி தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. உணவு சரியில்லை எனில் மாணவர்கள் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அமைச்சர் ஹரீஷ் தெரிவித்தார்.