உக்ரைன் ஜனாதிபதிக்கு பிரிட்டனின் உயரிய விருது வழங்கல்
By: Nagaraj Thu, 28 July 2022 11:27:40 AM
பிரிட்டன்: உயரிய விருது வழங்கல்... உக்ரைன் ஜனாதிபதிக்கு பிரித்தானியா உயரிய விருதை வழங்கி அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கவுரவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா போரில் பிரித்தானியா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ, நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கி வருகிறது.
போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து, பிரித்தானியா எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் ஜானதிபதி ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுரவித்துள்ளார். இது தொடர்பில் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது.
ஜெலன்ஸ்கியின் தைரியம், எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை அசைத்து, உலகளாவிய ஒற்றுமை அலைகளை கிளறிவிட்டன" என குறிப்பிட்டுள்ளார்.