எகிப்தில் நடக்கும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
By: Nagaraj Thu, 03 Nov 2022 11:15:36 PM
பிரிட்டன்: பருவநிலை மாநாட்டில் பங்கேற்கிறேன்... எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும், சர்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
முன்னதாக இந்த மாதம் 17ஆம் திகதிக்குள் அவசரகால வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்வது உட்பட, உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பிரதமர் ரிஷி சுனக் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளதால், எகிப்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், சுனக் பங்கேற்க மாட்டார் என அவரது அலுவலகம் கடந்த மாதம் 28ஆம் திகதி அறிவித்திருந்தது.
இந்தநிலையில், எதிர்கட்சிகள் இது தவறான முடிவு என கடுமையாக விமர்சித்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது அவரது முடிவை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், ‘பருவநிலை
மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நீண்ட கால
நோக்கில் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது. புதுப்பிக்கத்தக்க
எரிபொருள்களில் கவனத்தை செலுத்தாவிட்டால், எரிசக்தி தன்னிறைவை அடைய
முடியாது. அதன் காரணமாகத்தான் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பருவநிலை
மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறேன்.
பாதுகாப்பான,
நிலைத்தன்மையுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கொள்கையை
முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த மாநாட்டில் நான் கலந்துகொள்வேன்’ என
பதிவிட்டுள்ளார்.