பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை; மக்கள் கண்டனம்
By: Nagaraj Fri, 08 May 2020 1:43:34 PM
தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பரவி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குக்குப்பின் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மது வகைகள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில், நிலைமையை சமாளிக்க, ஊரடங்கு முடிந்து பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியில் லீக் ஆகி மக்களை வெகுவாக வேதனைப்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் வேலைவாய்ப்பை இழந்து வருமானம் இழந்துள்ளனர்.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு சரியானதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.