- வீடு›
- செய்திகள்›
- தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வர்த்தக விசாவில் வரலாம் - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வர்த்தக விசாவில் வரலாம் - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
By: Monisha Thu, 04 June 2020 3:12:09 PM
வெளிநாட்டுகளில் உள்ள தொழில் அதிபர்கள், சுகாதார வல்லுனர்கள், என்ஜினீயர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* பின்வரும் வகையிலான வெளிநாட்டினரை இந்தியாவுக்கு வர அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வர்த்தக விசாவில் (விளையாட்டு துறையினருக்கான பி-3 விசா தவிர்த்து) திட்டமிடப்படாத வணிக மற்றும் தனி விமானங்களில் இந்தியா வரலாம்.
* இந்திய சுகாதார துறை நிறுவனங்களில் (ஆய்வுக்கூடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்பட) தொழில் நுட்ப வேலைக்காக வெளிநாட்டு சுகாதார வல்லுனர்கள், சுகாதார ஆராய்ச்சியாளர்கள், என்ஜினீயர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் வரலாம். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட சுகாதார நிறுவனம், மருந்து நிறுவனம், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அழைப்புக்கு உட்பட்டு வரலாம்.
* வெளிநாட்டு என்ஜினீயர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தியாவில் அமைந்துள்ள வெளிநாட்டு வணிக நிறுவனங்களின் சார்பாக வர விரும்பினால் வரலாம். இதில் அனைத்துவகை உற்பத்தி நிறுவனங்கள், வடிமைப்பு பிரிவுகள், மென்பொருள், தகவல் தொழில் நுட்ப பிரிவுகள் அடங்கும். நிதித்துறை நிறுவனங்களும் (வங்கிகள் மற்றும் வங்கித்துறை சாராதவை) அடங்கும்.
* எந்திரங்களை நிறுவும் பணிக்காக, பழுது பார்க்க, பராமரிக்க இந்தியாவுக்கு தொழில் நுட்ப வல்லுனர்கள், என்ஜினீயர்கள் பதிவு செய்யப்பட்ட இந்திய வணிக நிறுவனத்தின் அழைப்பின் பெயரில் வரலாம்.
* வெளிநாட்டினரின் மேற்கண்ட பிரிவினர் புதிய வர்த்தக விசா அல்லது வேலைவாய்ப்பு விசாவை பொருந்தக்கூடிய வகையில், அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பெற வேண்டும். இந்திய தூதரகங்களில் நீண்ட கால பல நுழைவு வர்த்தக விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டினர் சம்மந்தப்பட்ட இந்திய தூதரகத்தில் இருந்து வர்த்தக விசாவை பெற வேண்டும்.
* முன்னர் பெறப்பட்ட எந்தவொரு மின்னணு விசாவின் மூலம் இந்தியா வருவதற்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.