கொரோனா தடுப்பூசியை பெறலாமா? தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை
By: Nagaraj Wed, 12 Aug 2020 09:43:19 AM
இன்று ஆலோசனை... ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்துள்ள தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
கொரோனாவைத் தடுக்க Sputnik V என்ற தடுப்பூசி தயாராகிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமது மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும், அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி மீது இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் அது கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இறுதிகட்ட சோதனையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த தடுப்பூசி பதிவு
செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உரிய பரிசோதனை நடத்தாமல்
பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது.
இருப்பினும்
இந்த தடுப்பூசி செப்டம்பர் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும், மருத்துவ
பணியார்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதற்கட்டமாக போடப்படும் எனவும் ரஷ்யா
அறிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி
பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை
நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.