மெட்ரோ ரயில்களில் அச்சமின்றி பயணம் செய்யலாம்; அமைச்சர் தகவல்
By: Nagaraj Sun, 06 Sept 2020 09:05:39 AM
மெட்ரோ ரயில்களில் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி பயணம் செய்யலாம் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சென்னையில் நாளை 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது. இதை ஒட்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சோதனை ஓட்டம் சென்ற மெட்ரோ ரயிலில் சிறிது தூரம் பயணம் செய்து, பயணிகளுக்கான வசதிகள், சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது: சென்னையில்
நாளை 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களை இயக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக
உள்ளன. ரயில் பெட்டிகளில் வெப்பநிலை அளவு 24 முதல் 30 டிகிரி அளவில்
பராமரிக்கப்படும்.
சுத்தமான காற்றோட்டத்தின் அளவு 4 மடங்கு
அதிகரிக்கப்பட்ட நிலையில் பெட்டிகள் இயக்கப்படும். மெட்ரோ ரயிலில்
பயணிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக பயணம்
செய்யலாம்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்
இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, காலை 7
மணி முதலே ரயில் சேவை தொடங்கும். கட்டணத்தில் மாற்றம் இல்லை. பழைய கட்டணமே
வசூலிக்கப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்க 'க்யூஆர் கோடு' (QR Code)
முறையில் டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.