மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது வழக்குப்பதிவு
By: Nagaraj Mon, 06 Feb 2023 10:13:40 AM
பார்மர்: பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பகைமையை தூண்டி மத உணர்வுகளை புண்படுத்தியதாக யோகா குரு ராம்தேவ் மீது இன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்வாசி பட்டாய் கான் அளித்த புகாரின் அடிப்படையில் சவுஹாட்டன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராம்தேவ், இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்துடன் ஒப்பிட்டு, முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதாகவும், இந்து பெண்களை கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். மற்ற இரண்டு மதங்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்ய கற்றுக்கொடுக்கிறது என்றார்.
இந்த வழக்கில், ராம்தேவ் மீது IPC பிரிவுகள் 153A (மதம், சாதி, பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபட்ட குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தீங்கு விளைவிக்கும் செயல்கள்) மற்றும் 298 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.