சமீர் வான்கடே உள்ளிட்ட 4 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு
By: Nagaraj Tue, 16 May 2023 10:35:29 PM
புதுடில்லி: நடிகர் ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்ட வழக்கில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 4 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில், மும்பை அருகே கோர்டாலியா பயணக் கப்பலை சோதனை செய்த சமீர் வான்கடே தலைமையிலான என்சிபி அதிகாரிகள், போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 17 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து சமீர் வான்கடே, என்சிபி கண்காணிப்பாளர் விவி சிங் உள்ளிட்டோருக்கு சொந்தமான 29 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில் சமீர் மற்றும் அவரது குழுவில் உள்ள இரு அதிகாரிகள் உரிய விசாரணையை பின்பற்றாமல் ஷாருக்கான் குடும்பத்தினரிடம் பணம் பறிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சமீர் வான்கடே உள்ளிட்டோர் மீது சதி, பணம் பறிக்க முயற்சி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.