- வீடு›
- செய்திகள்›
- சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 23ம் தேதி முடிவு தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு
சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவது குறித்து வரும் 23ம் தேதி முடிவு தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு
By: Nagaraj Thu, 18 June 2020 12:44:42 PM
சிபிஎஸ்இ தேர்வுகள்... 'வரும், ஜுலை, 1-15 வரை, 10 மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.,இ., தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பித்த ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து, இறுதி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், ஜுலை,1-15 வரை, நாடு முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு எஞ்சிய பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவித்தது.
டில்லி, வட கிழக்கு பகுதியில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் தடைபட்ட, 10ம் வகுப்பு தேர்வும் நடத்தப்படும் என, தெரிவித்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேர்வு நடத்தினால், மாணவர்கள்
பாதிக்கப்படக் கூடும். குறிப்பாக, ஜுலையில், கொரோனா பாதிப்பு உச்சத்தை
அடையும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. எனவே,
அந்த சமயத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கும் ஆபத்து
உள்ளது. எனவே, பிளஸ்-2 தேர்வு நடத்துவது தொடர்பாக, சி.பி.எஸ்.இ.,
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அத்துடன், தேர்வு
நடத்தவும் தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே நடத்தி முடித்த தேர்வுகள், பள்ளி
நிர்வாகங்கள் மாணவர்களிடம் நடத்திய உள் மதிப்பீடு ஆகியவற்றின்
அடிப்படையில், மதிப்பெண் அளித்து, தேர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி,
ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக
விசாரித்து.
அப்போது, சி.பி.எஸ்.இ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
ரூபேஷ் குமார், ''பிளஸ்-2 தேர்வு நடத்துவது குறித்து உரிய முடிவு எடுத்து
விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார். இதையடுத்து, வரும், 23ம் தேதிக்கு
விசாரணையை ஒத்தி வைத்த அமர்வு, அன்று, முடிவை தெரிவிக்க வேண்டும் என,
உத்தரவிட்டது.