சென்னை வானகரத்தில் நாளை (11-ந்தேதி) ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா
By: vaithegi Fri, 10 June 2022 5:24:56 PM
சென்னை:
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் மனதில் எப்போதும் ஒலித்துகொண்டிருக்கும் பாடல் ஹரிவராசனம். பாடகர் ஜேசுதாசின் தேவகான குரலில் ஒலிக்கும் இந்த பாடல் சபரிமலையில் நடைசாற்றும்போது இசைக்கப்படும்.
1952-ம் ஆண்டு முதல் இந்த பாடல் சபரிமலையில் இசைக்கப்பட்டு வருகிறது. புகழ் பெற்ற இந்த பாடலை கொன்னகத்து ஜானகி அம்மாள் என்பவர் 1923-ம் ஆண்டு இயற்றி உள்ளார். சென்னை வானகரத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது.
ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நூற்றாண்டு விழா இலட்சினையை வெளியிடுகிறார். தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இசைஞானி இளையராஜா, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த சோபன் மற்றும் ஆயிரம் பேர் விழாவில் கலந்துக்கொள்வதாக தகவல் தெரியவந்துள்ளது.
சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்ல காரணமாக இருந்த சின்மயானந்த சுவாமி, நவாப் ராஜமாணிக்கம், லிமோ சனானந்த சாமி, குளத்தூர் அய்யர், எம்.என்.நம்பியார், பி.டி.ராஜன் ஆகியோர்களின் வரலாறு என்றும் நிலைத்திருக்கும்.