சமூக விலகலை கடைப்பிடித்து பால் வியாபாரி நுாதன முறையில் பால் வினியோகம்
By: Nagaraj Mon, 11 May 2020 09:36:21 AM
நுாதன முறையில் பால் வினியோகம்... புதுகை அருகே பால் வியாபாரி ஒருவர் சமூக விலகலை கடைப்பிடித்து, நுாதன முறையில் பால் வினியோகம் செய்கிறார்.
கொரோனா பிரச்னையால், சமூக விலகலை கடைப்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில், சில ரேஷன் கடைகளில், பெரிய பைப் மூலம் ரேஷன் பொருட்களை வழங்கி, சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே மாஞ்சான்விடுதியைச் சேர்ந்தவர் கணேசன் (59). இவர் 20 ஆண்டுகளாக கிராமப் பகுதிகளில் பால் விற்பனை செய்து வருகிறார்.
கொரோனா பிரச்னையால், சமூக விலகலை கடைப்பிடிக்க, பால் கேனுக்கும், வாடிக்கையாருக்கும் இடையே, 3 அடி நீள பைப் வைத்துள்ளார். புனல் வழியாக, பைப்பில் கணேசன் ஊற்றும் பாலை, வாடிக்கையாளர்கள், பாத்திரத்தில் பிடித்து கொள்கின்றனர்.
கணேசனும் முகத்தில், 'மாஸ்க்' அணிந்தே பால் வியாபாரம் செய்கிறார். சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளும் பால்காரர் கணேசனை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.