- வீடு›
- செய்திகள்›
- அரிசிக்குப் பதிலாக பணம் குறித்த வழக்கு: மத்திய அரசும், துணை நிலை ஆளுநரும் பதிலளிக்க உத்தரவு
அரிசிக்குப் பதிலாக பணம் குறித்த வழக்கு: மத்திய அரசும், துணை நிலை ஆளுநரும் பதிலளிக்க உத்தரவு
By: Monisha Fri, 05 June 2020 10:25:38 AM
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதம் தோறும் இலவச அரிசி வழங்க உத்தரவிட்டு இருந்த நிலையில், அரிசிக்குப் பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். அதையடுத்து மத்திய அரசும் அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், ‘‘குடியரசுத் தலைவரின் அறிவுறுத்தல்படியே மத்திய அரசு இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அந்த உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்பட வேண்டும்’’ எனக்கூறி முதல்வர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தார்.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து நாராயணசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், இலவச அரிசி வழங்கப்படும் என்பது தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி. அதை நம்பித்தான் மக்களும் இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை, என சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந் தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், தற்போது கொரோனா பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக புதுச்சேரி ஆளுநர் மற்றும் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் ஜூலை 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அதற்குள் மத்திய அரசும், துணை நிலை ஆளுநரும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.